கேமரன்  மலைச் சாலை  விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்; அவரது மனைவியும் நான்கு பிள்ளைகளும் காயமடைந்தனர்

24 ஏப்ரல் 2026, 7:02 AM
கேமரன்  மலைச் சாலை  விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்; அவரது மனைவியும் நான்கு பிள்ளைகளும் காயமடைந்தனர்

ஈப்போ: தாப்பா - கேமரன்  மலைச் சாலையில் நேற்று இரவு நிகழ்ந்த விபத்தில், எஸ்யூவி ரக வாகனம் ஒன்று சுமார் மூன்று மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் பாய்ந்ததில் கணவர் உயிரிழந்தார்; அவரது மனைவியும் நான்கு பிள்ளைகளும் காயமடைந்தனர்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை  பிரிவு உதவி இயக்குனர் சபரோட்ஸி நூர் அஹ்மட் கூறுகையில், இரவு 8.43 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் 44 வயதான வாகன ஓட்டுநர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். காயமடைந்த மற்ற ஐவரின் வயது 6 முதல் 48 வரை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நெருங்கிய உறவினர் ஒருவரின் மறைவையொட்டி, கோலாலம்பூரிலிருந்து கேமரன் மலைக்கு இந்தக் குடும்பம் பயணம் செய்து கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

"ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, குடும்பத்தினர் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் பாய்ந்து, அங்குள்ள ஆழமற்ற ஆற்றில் கவிழ்ந்துள்ளது," என்று அவர் கூறினார்.

"சிக்கிக்கொண்ட ஓட்டுநரை மீட்பதற்கு நாங்கள் 'SAVER' எனும் முறையைப் பயன் படுத்தினோம். காயமடைந்த மற்ற ஐந்து பேரையும் பொதுமக்கள் முன்னதாகவே மீட்டிருந்தனர்," என்றார் அவர்.

உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

இதற்கிடையில், தாப்பா மாவட்ட காவல் துறைத் தலைவர் கண்காணிப்பாளர் அப்துல் மாலிக் ஹாசிம் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் வேறு எந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை என்றும், வாகனம் தானாகவே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து அருகிலிருந்த ஆற்றுக்குள் விழுந்ததாகவும் தெரிவித்தார்.

"சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு வீரர்களும் பொது மக்களும் பாதிக்கப்பட்டவர்களை வாகனத்திலிருந்து வெளியேற்ற உதவி செய்தனர்."

"சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரி உறுதி செய்தார். காயமடைந்த மற்ற அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தாப்பா மாவட்ட காவல் துறைத் தலைமையகத்தை 05-4011222 என்ற எண்ணிலோ அல்லது போக்குவரத்துப் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மது பைசான் அஹ்மட் @ முகமது ரஸிகினை 013-2087819 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.