மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லோரி சக்கரத்தில் சிக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்  

18 மார்ச் 2026, 4:16 AM
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லோரி சக்கரத்தில் சிக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்  

ஷா ஆலம், மார்ச் 18: உலு சிலாங்கூர், புக்கிட் செந்தோசாவில் உள்ள ஜாலான் காந்தானில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகே நேற்று நடந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லோரி சக்கரத்தில் சிக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

சுமார் பிற்பகல் 3.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 64 வயதான பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர், கண்காணிப்பாளர் இப்ராஹிம் ஹுசின் கூறுகையில், ஆரம்ப கட்ட விசாரணையில் சுமையேதும் இல்லாத லோரியை 77 வயதுடைய ஓட்டுநர் சுங்கை சோவிலிருந்து ரவாங்கை நோக்கி ஓட்டிச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.

“பெர்சியாரான் அசலாம் போக்குவரத்து விளக்கு சந்திப்பை அடைந்தபோது, லோரி வலதுபுறம் திரும்பியுள்ளது. அப்போது, பின்னால் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், லோரியின் இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்றுள்ளார்."

"மிகவும் நெருக்கமாக இருந்ததால், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லோரியுடன் உரசியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர்மீது லோரி ஏறியது,” என்று அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தலையில் பலத்த காயம் அடைந்ததாகவும், லோரி ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோல குபு பாரு மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், போக்குவரத்து விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நூருல் அனாட்டி சுல்கிப்லியை 03-60641222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு உதவலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.