குவாந்தான்: பெந்தோங், 25-வது பட்டாலியன் ராயல் மலாய் ரெஜிமென்ட் ராணுவ முகாமில் சக இராணுவ வீரர்கள் ஏழு பேரைத் தாக்கியதுடன், அவர்களில் ஒருவருக்குப் பலத்த காயத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படும் இராணுவ வீரர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 24 வயது வீரரின் 49 வயது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, 37 வயதான சந்தேக நபர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையில், சந்தேக நபர் பாதிக்கப்பட்ட வீரரைத் தாக்கியதாகவும், குத்தியதாகவும், உதைத்ததாகவும் நம்பப்படுகிறது என்றார் அவர்."இந்தச் சம்பவத்தின் போது, 19 முதல் 22 வயதுக்குட்பட்ட மேலும் ஆறு இராணுவ வீரர்களும் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சுயநினைவின்றி இருப்பதாகவும், அவருக்குச் சுவாச உதவி தேவைப் படுவதால் தெமர்லோ, சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மற்றவர்கள் பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டப் பிரிவு 325-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், கோப்ரல் பதவியில் உள்ள சந்தேக நபர் நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸைஹாம் கூறினார்.விசாரணையைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு வதந்தியையும் பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.





