கோலாலம்பூர், செப்.16 – திறன்மிகு நகரங்களின் செயலாக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் முழுமையாக அரசாங்கத்தை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது என மலேசிய திறன்மிகு நகரங்கள் கூட்டமைப்பு (MSCA) வலியுறுத்தியுள்ளது.
திறன்மிகு நகரங்களுக்கான திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க தொழில்துறையும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என MSCA தலைவர் டாக்டர் ரஸ்லான் அஹ்மாட் குறிப்பிட்டார்.

தொழில்துறை தரப்பினர் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், நிதியுதவி, தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பங்களிப்புகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.
பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் வெவ்வேறு நிலைகளுக்கு இடையே கொள்கைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் ஒருமைப்பாடு இல்லாதது, திறன்மிகு நகரங்களுக்கான திட்டங்களை ஒருங்கிணைப்பதில் சவாலாக இருப்பதாக டாக்டர் ரஸ்லான் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை அதிகளவில் சார்ந்திருப்பதும், மாற்று நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதும் மற்றொரு தடையாக உள்ளது.

அதேவேளை, முன்னோடித் திட்டங்களை முழு நகர அளவிலான பெரிய திட்டங்களாக விரிவுபடுத்துவதிலும் பல்வேறு சவால்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பழைய தொழில்நுட்ப அமைப்புகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது, புதிய தொழில்நுட்பங்களுடன் அவற்றை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுக்கு இடையிலான செயல்பாட்டு இணக்கத்தன்மை ஆகியவைவும் முக்கிய தடைகளாக இருப்பதாக அவர் விளக்கினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இணையம் (IoT) உள்ளிட்ட துறைகளில் திறமையான பணியாளர்களின் பற்றாக்குறையும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாக உள்ளதாக டாக்டர் ரஸ்லான் தெரிவித்தார்.
இந்தத் துறைகளில் உள்ளூர் திறன்களை மேம்படுத்துவதும் அவசியம் என்றும் அவர் கூறினார்.







