கோலாலம்பூர், செப்.12: நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு (HADR) நடவடிக்கையில் பங்கேற்ற SMART குழு இன்று அல்லது நாளை நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
நேபாளத்தில் தொடரும் பேரிடர் மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட SMART குழுவுக்குச் சொந்தமான ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) உள்ளிட்ட சில உபகரணங்கள், அந்நாட்டு மீட்புக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தற்போதைய நிலையில், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை (SAR) முடிவுக்குக் கொண்டுவரும் அறிவிப்பை வெளியிட நேபாள அதிகாரிகள் விரும்பவில்லை என்றும் முகமட் கூறினார்.
இன்னும் சுமார் 5,000 பேர் காணாமல் போனவர்களாகப் பதிவாகியுள்ளதால், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட மலேசியர்களின் தற்போதைய நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக, காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக முகமட் தெரிவித்தார்.
காணாமல் போன மலேசியர்களின் நிலை குறித்து தகவல்களைப் பெறுவதன் மூலம், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் காப்புறுதி மற்றும் இதர நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்க முடியும் என அவர் கூறினார்.
நேபாளத்தில் காணாமல் போன அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள ஒருவருக்கான மரணச் சான்றிதழை வழங்குவதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், மலேசியாவில் அதற்கான காலக்கெடு ஏழு ஆண்டுகள் எனவும் முகமட் விளக்கினார்.
காணாமல் போனவர்களின் நிலையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகள் விரைவாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மலேசியத் தூதரகம் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.







