ஷா ஆலாம், செப்.16 — நாட்டின் முக்கியமான சொத்தாக விளங்கும் தேசிய ஒற்றுமையை அனைத்து மக்களும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.
இதனை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
பல இனங்களையும் சமயங்களையும் உள்ளடக்கிய மலேசிய சமூகத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நாடு தொடர்ந்து வளமுடனும் நல்வாழ்வுடனும் முன்னேற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தீபகற்ப மலேசியாவிலிருந்து சபா, சரவாக் வரை நமது ஒற்றுமை என்பது அனைத்து மக்களாலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான சொத்தாகும் என்றார் அவர்.
வரலாற்றைப் பார்க்கும்போது, பிளவுகளும் வெறுப்பும் மக்களுக்கும் நாட்டுக்கும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன என்பதை நிரூபிப்பதாக அமிருடின் கூறினார்.
எனவே, அனைத்து மலேசியர்களும் தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதுடன், நாட்டின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.







