பாங்கி, செப்.15: எதிர்கால சவால்களை எதிர்கொள்ள கல்வித் துறை தயாராகி வருகிறது.
இந்நிலையில், பள்ளி அளவிலேயே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுவது மிகவும் முக்கியம். இதன் மூலம் எதிர்கால மாற்றங்களுக்கு அவர்கள் தயாராகி, AI தொழில்நுட்பத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.

சிலாங்கூரில் கிட்டத்தட்ட 10 லட்சம் மாணவர்களும் 63,000 ஆசிரியர்களும் உள்ளனர். அவர்களில் கணிசமானோர் இடைநிலைப் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.
எனவே, சிலாங்கூர் தொடர்ந்து போட்டித்தன்மை மிக்க மாநிலமாகத் திகழ்வதை உறுதி செய்ய கல்வித் துறைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றார் அமிருடின்.
இதனிடையே, இவ்வாண்டுக்கான தேசிய மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத்தின் சிலாங்கூர் கிளைக்கு (MPSM) மாநில அரசாங்கம் 50,000 ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீடு சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டு, ஆசிரியர் தொழிலை மேம்படுத்துவதுடன் சிலாங்கூரில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்களின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என தாம் நம்புவதாக அமிருடின் ஷாரி கூறினார்.







