கோலாலம்பூர், செப்.13 – இந்தோனேசியாவில் நிலவும் கடுமையான புகைமூட்டதால் அந்நாட்டில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்கள் எவரும் இதுவரை உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.
இதனை உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தோனேசியாவில் தொடர்ந்து மோசமடைந்து வரும் புகைமூட்ட நிலை குறித்து உயர்கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அங்கு இருக்கும் மலேசிய மாணவர்களின் நிலைமையை, இந்தோனேசியாவில் செயல்படும் Education Malaysia Indonesia (EMI) அலுவலகத்தின் வாயிலாக அமைச்சு கண்காணித்து வருவதாகவும் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் கொள்கைகளைப் பொறுத்தே அங்கு கல்வி நடவடிக்கைகள் தொடருமா அல்லது மாற்றம் செய்யப்படுமா என்பது தீர்மானிக்கப்படும் என அமைச்சர் விளக்கமளித்தார்.
சில பல்கலைக்கழகங்கள் புகைமூட்டம் காரணமாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டால், அவற்றின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இச்சூழ்நிலை ஏற்பட்டால் அங்கு பயிலும் மலேசிய மாணவர்களும் பாதிக்கப்படலாம் என அவர் கூறினார்.
இதனிடையே, இந்தோனேசியாவில், குறிப்பாக கலிமந்தான் பகுதியில், காட்டுத்தீ காரணமாக புகைமூட்ட நிலைமை மோசமடைந்து வருவதாக தகவல்கள் முன்னதாக வெளியாகியிருந்தன.
நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தோனேசியா தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சனையை எதிர்கொள்ள அண்டை நாடுகளுடனான ஒருங்கிணைப்பையும் அதிகரித்துள்ளது.







