ஷா ஆலாம், செப்.13 – சிலாங்கூரில் காற்றுத் தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி, ஆறு பகுதிகளில் காற்றுத் தரம் மிதமான நிலையில் பதிவாகியுள்ளது.
இன்று காலை 7.42 மணி நிலவரத்தில் ஜோஹான் செத்தியாவில் அதிகபட்சமாக 95 என காற்று மாசுக் குறியீடு அளவு (IPU) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஷா ஆலாமில் 79, பந்திங்கில் 74, பெட்டாலிங் ஜெயா மற்றும் கிள்ளானில் தலா 71 என்ற அளவிலும் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
சிலாங்கூரில் காற்றுத் தரம் சிறப்பாக காணப்பட்ட பகுதியாக கோலா சிலாங்கூர் விளங்குகிறது. அங்கு IPU 65 ஆக பதிவாகியுள்ளது.
எனினும், சரவாக்கில் உள்ள ஐந்து பகுதிகளில் காற்றுத் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பது பதிவாகியுள்ளது.
அவற்றில் செரியானில் அதிகபட்சமாக 189 என்ற IPU பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஸ்ரீ அமானில் 176, கூச்சிங்கில் 157, சமரஹானில் 156 மற்றும் சிபுவில் 110 என்ற அளவில் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.
பொதுமக்கள் குறிப்பாக காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற பகுதிகளில் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப வெளிப்புற நடவடிக்கைகளைத் திட்டமிடுவது அவசியமாகும்.







