கோலாலம்பூர், செப். 7: நாடு முழுவதும் புகைமூட்டம் நிலவி வரும் நிலையில், தங்களது பிள்ளைகளின் சுகாதாரம் குறித்து கவலைப்படும் பெற்றோர், அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர் முடிவு செய்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிப்பது மட்டுமே போதுமானது என அவர் கூறினார்.
மேலும், புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலவரத்தைக் கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஃபட்லினா தெரிவித்தார்.
காற்று மாசுபாட்டுக் குறியீடு (API) அளவு 100-யை தாண்டும்போது அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதோடு 200-யை தாண்டினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
பிள்ளைகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







