கோலாலம்பூர், செப் 9 : நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைவதற்காக, மலேசியா யுனைடெட் சீக்கியர் (United Sikhs Malaysia) அமைப்பைச் சேர்ந்த ஐவர் கொண்ட நிவாரணக் குழுவினர், கரடு முரடான சாலைகள், குறுகிய பாதைகள், சேற்றுப் பள்ளங்கள் மற்றும் குறைந்த எரிபொருள் ஆகிய சவால்களுக்கு மத்தியில் 16 மணி நேரக் கடுமையான பயணத்தை மேற்கொண்டனர்.
ஆபத்தான மாற்றுப் பாதைகள் காரணமாக அவர்கள் காத்மாண்டுவிலிருந்து துஞ்சே (Dhunche) நகரை வந்தடைவதற்குள் மிகவும் மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் பயணிக்க வேண்டியிருந்தது என அக்குழுவிற்குத் தலைமை தாங்கிய அவ்வமைப்பின் துணைத் தலைவர் மந்தீப் சிங் தெரிவித்தார்.
செப்டம்பர் 6 நள்ளிரவில் துஞ்சே நகரில் தங்களின் செயல்பாட்டுத் தளத்தை அமைத்த இக்குழுவினர், பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை மதிப்பிடவும் ஷஃப்ருபேசி (Syafrubesi) நோக்கிப் பயணித்தனர்.
"திபெத் எல்லையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷஃப்ருபேசிக்கான மாற்றுப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
எங்களது வாகனம் உட்பட பல வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன. பெரும்பாலான பாதைகள் ஒற்றை வழிப்பாதையாக இருந்ததால், பயணம் மிகவும் மெதுவாகவும் கணிக்க முடியாததாகவும் இருந்ததுடன், துல்லியமான திட்டமிடலும் தேவைப்பட்டது.
பயணம் முழுவதும் உணவு மற்றும் எரிபொருளுக்கான வசதிகளும் மிகவும் குறைவாகவே இருந்தன," என்று அவர் நேற்று பெர்னாமாவிடம் தங்களின் பணிகளைப் பகிர்ந்துகொண்டபோது தெரிவித்தார்.
ஷஃப்ருபேசிக்கான இரு முக்கியப் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மந்தீப் கூறினார்.
பெட்ராவதியிலிருந்து (Betrawati) நதியோரமாகச் செல்லும் 42 கிலோமீட்டர் நீர் மின்சாரச் சாலை முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், எல்லைச் சந்திப்பிற்குச் செல்லும் பகுதிக்குச் சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு முன்பாக மாற்றுப் பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஷாஃப்ருபேசியில் ஏற்பட்டுள்ள சேதம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கு சுமார் 225 முதல் 250 அடி உயரம் வரை எட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு 22 மாடி கட்டிடத்தின் உயரத்திற்குச் சமமாகும்," என்று அவர் கூறினார்.
தற்போது 'குழு ஏ' (Team A) திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள 95 கிலோமீட்டர் தூரப் பகுதியில் தங்களின் ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தார்பாய்கள், தற்காலிகக் கூடாரங்கள் மற்றும் கொசுவலைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் என்றும் அவர் கூறினார்.
"உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து ஆய்வுத் தரவுகளையும் 'குழு ஏ' வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் வரவிருக்கும் 'குழு பி'-யிடம் (Team B) ஒப்படைக்கும்.
அதன் பிறகு அவர்கள் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் பணியைத் தொடருவார்கள்," என்றார்.
இதற்கிடையில், உள்ளூர் மீட்புக் குழுவினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து வரும் வேளையில், காணாமல் போன மலேசியர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக மலேசியா யுனைடெட் சீக்கியர் அமைப்பு அங்குள்ள தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக மந்தீப் தெரிவித்தார்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான வெள்ளப் பேரழிவில் இதுவரை 1,357 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5,326 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







