ஷா ஆலாம், செப் 8 : நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கில் சிக்கி, எந்தவொரு தகவலும் இல்லாமல் 14 நாட்கள் கடந்த பிறகும், காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினர், தங்களது அன்புகுரியவர்களின் நிலை குறித்த ஏதாவதொரு தகவல் கிட்டுமெனும் நம்பிக்கையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்கும் வரை தாங்கள் நம்பிக்கையைக் கைவிடப் போவதில்லை என்றும், தேடுதல் நடவடிக்கைத் தொடர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதியான டாக்டர் ஆர்.மணிவண்ணன், ஆஸ்ட்ரோ அவானி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள். ஒருவேளை அவர்கள் உயிரிழந்திருந்தால், அவர்களின் உடல்களைக் கண்டுபிடித்து, அடையாளம் கண்டு தாய்நாட்டிற்கு கொண்டு வாருங்கள்," என்று அவர் கூறினார்.
இரு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படாத ஏதேனும் ஓரிடத்தில் சிக்கியிருக்கலாம் அல்லது தஞ்சம் அடைந்திருக்கலாம் என்பதைத் தவிர, அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
உயிருடன் இருக்கக்கூடியவர்களைத் தேடும் பணியைத் தொடர்வது மற்றும் உயிரிழந்ததாகக் கருதப்படுபவர்களை அடையாளம் காண்பது என இரண்டு வழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த நடவடிக்கை முடுக்கப்பட வேண்டும் என்று மணிவண்ணன் கூறினார்.
14 நாட்கள் கடந்துவிட்டதால், உடல்களை உடலமைப்பைக் கொண்டு அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும்,
எனவே தடயவியல் மற்றும் பேரிடரில் பலியானோரை அடையாளம் காணும் (Disaster Victim Identification - DVI) நிபுணத்துவத்தை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"தடயவியல் மற்றும் DVI குழுக்களை உடனடியாக களமிறக்க வேண்டும், இதில் மரபணு(DNA) மாதிரிகளைச் சேகரிப்பது மற்றும் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் செயல்முறைகளை விரைவுபடுத்துவதும் அடங்கும்," என்று அவர் கூறினார்.







