கோலாலம்பூர், செப்.6 -நேபாளத்தில் மனிதநேய உதவிகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட ' ஸ்மாரட்' (SMART) மலேசிய சிறப்பு பேரிடர் உதவி மீட்புக் குழுவினர், நேற்று உள்ளூர் நேரப்படி நண்பகலில் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தனர்.,
அக்குழுவினர் தளவாட அனுமதி மற்றும் உறுப்பினர்களின் விபர சரிபார்ப்பு உட்பட, தங்களின் வருகை நடைமுறைகளை, உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணிக்குள் முடித்ததாக நட்மா (Nadma) தேசியப் பேரிடர் நிர்வாக மன்றம் இன்று அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.
அக்குழுவினர் நேபாளத்தின் தற்போதைய பேரிடர் நிலைமை குறித்த விளக்கத்தைப் பெறுவதற்காக மலேசிய தூதரகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஸ்மார்ட் குழுவினரை எங்கு பணியில் அமர்த்துவது என்பது குறித்து தீர்மானிக்க, தூதரகம் மற்றும் உள்ளூர் அவசரக்கால நிர்வாக அமைப்புகளுடன் அக்குழு ஒருங்கிணைந்து செயல்படும்” என்றும் நட்மா கூறியது.
நேபாளத்தில் உள்ள மலேசிய தூதரகமும் நட்மாவும் ஸ்மார்ட் குழுவினரின் நடவடிக்கை குறித்து தினசரி பணி அறிக்கைகளை ஒருங்கிணைக்கும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்தது.
11 பேர் கொண்ட SMART குழுவினர் நேற்று காலை 9 மணிக்கு சுபாங் விமானப்படைத் தளத்திலிருந்து அரச மலேசிய விமானப்படையின் (RMAF) A400M விமானம் மூலம் நேபாளத்திற்குப் புறப்பட்டனர்.
அவர்களுடன் 12.4 டன் எடையுள்ள உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் மீட்புக் கருவிகள், கண்டறியும் சாதனங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள், அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கப்பாதை மீட்புக்கான சிறப்பு கருவிகள் ஆகியவை அடங்கும்.
அத்துடன் ஒரு நான்கு சக்கர வாகனமும் 10 டன் சரக்கு லாரியும் அந்த விமானத்தில் கொண்டுச் செல்லப்பட்டது.









