ஷா ஆலம், செப் 8 - 2026 பாரா சுக்மா விளையாட்டாளர்கள் எவரும் இதுவரை புகைமூட்டத்தால் சுகாதாரப் பாதிப்புக்கு ஆளாகவில்லை.
காற்று மாசுபாட்டினால், விளையாட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய, அவர்களின் ஆரோக்கிய நிலையைத் தங்களது தரப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதாக , இளைஞர் , விளையாட்டு அமைச்சர் டாக்டர் மொஹமட் தவ்ஃபிக் ஜோஹாரி தெரிவித்தார்.
விளையாட்டின் போது ஏற்படும் சாதாரணக் காயங்களைத் தவிர, புகைமூட்டம் காரணமாக எந்தவொரு தடகள வீரருக்குக் காயமோ அல்லது உடல்நலக் குறைவோ இதுவரை ஏற்படவில்லை என்றும், வீரர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த இந்த நிலைமையை அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விளையாட்டாளர்களுக்கு, குறிப்பாக சுவாசம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், ஒவ்வொரு மாநிலக் குழுவின் தலைவரும் உடனடியாகச் செயலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், ஒவ்வொரு விளையாட்டாளரும் படிவங்களை நிரப்ப வேண்டும் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து விளையாட்டாளர்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, அமைச்சர் முகமட் தவ்ஃபிக் , விளையாட்டு மேம்பாட்டுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமுடன், இங்குள்ள பொட்சா ( boccia ) மற்றும் பூப்பந்துப் போட்டிகளைப் பார்வையிட்டதோடு, விளையாட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.
இதற்கிடையில், தற்போதைய புகைமூட்ட நிலைமையைக் கருத்தில் கொண்டு பாரா சுக்மா ஏற்பாட்டுக் குழு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அனைத்து விளையாட்டாளர்களும் அதிகாரிகளும் கட்டிடங்களுக்கு வெளியிலோ வாகனங்களுக்கு வெளியிலோ இருக்கும்போது N95 முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதோடு, புகைமூட்டத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய விளையாட்டாளர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு குழுவும் சுகாதாரப் பரிசோதனைகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டாளர்கள் புகைமூட்டத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, ஒவ்வொரு வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் அதிகபட்சமாக இரு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.








