ஷா ஆலம், செப். 7: புகைமூட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2026 சிலாங்கூர் பாரா சுக்மாவின் நான்கு விளையாட்டு போட்டிகள், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த முடிவு, குழுத் தலைவர்கள் மற்றும் சிறப்பு தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்காத வீரர்கள் போட்டி நடைபெறும் தளத்திலோ அல்லது திறந்தவெளிப் பகுதிகளிலோ இருப்பதற்கு அனுமதி இல்லை.
மேலும், புகைமூட்டத்துக்கு ஆளாகக்கூடிய வீரர்கள் போட்டியில் பங்கேற்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு குழுவின் மருத்துவக் குழுவும் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாரா தடகள வீரர்கள் மற்றும் அதிகாரிகள் N95 முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், திறந்தவெளியில் அவர்கள் செலவிடும் நேரத்தைக் குறைக்கவும், போட்டிகளின் கால அளவை அதிகபட்சம் இரண்டு மணி நேரமாகக் கட்டுப்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு போட்டி அமர்வும் நிறைவடைந்த உடனேயே பதக்கங்கள் வழங்கப்படும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், காற்றுத் தரக் குறியீடு (IPU) 200 கடந்தால், அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்படும் என பாரா சுக்மா 2026 சிறப்பு தொழில்நுட்பக் குழுக் கூட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.







