ஷா ஆலம், செப் 6 : புகை மூட்டம் காரணமாக, 2026 பாரா சுக்மாவின் (Para SUKMA 2026) நான்கு போட்டிகள் இன்று ஒத்தி வைக்கப்பட்டன.
ஷா ஆலம், கிள்ளான் ஆகிய பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால், இந்த நான்கு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக 2026 சுக்மா , பாரா சுக்மா ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
"சுற்றுச்சூழல் துறை (JAS), சுகாதாரத் துறை மற்றும் அவ்வப்போது நிலைமையைக் கண்காணித்து வரும் தொழில்நுட்பச் சிறப்புக் குழு ஆகியவற்றின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.
UiTM அரங்கில் நடைபெறவிருந்த பாரா தடகளம், சிலாங்கூர் நீச்சல் வளாகத்தில் நடைபெறவிருந்த பாரா நீச்சல், சிலாங்கூர் மாநில இளைஞர் , விளையாட்டு வளாகத்தில் நடைபெறவிருந்த பாரா வில்வித்தை, கிள்ளான், பாயுமாஸில் நடைபெறவிருந்த புல்வெளிப் பந்து ஆகியப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
போட்டி நடைபெறும் இடங்களில் நிலவும் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டின் (IPU) நிலையைப் பொறுத்து, போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது .
அவை மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும் என்று மாநில விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினரான முகமட் நஜ்வான் கூறினார்.
செப்டம்பர் 5 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் 2026 பாரா சுக்மா விளையாட்டுப் போட்டிகளை சிலாங்கூர் மாநிலம் ஏற்று நடத்துகிறது.






