ஷா ஆலம், செப். 7: பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் மற்றும் பெக்கான் ராவாங் பகுதிகளில் உரிமம் இன்றி மேற்கொள்ளப்பட்ட வியாபார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் செலாயாங் ஊராட்சி மன்றம் (MPS) 23 அபராதங்களை விதித்துள்ளது.
MPS-இன் அமலாக்கம் மற்றும் பாதுகாப்புத் துறை, உரிமத் துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
செலாயாங் ஊராட்சி மன்றத்தின் 2007ஆம் ஆண்டு வியாபாரிகள் துணைச் சட்டங்களுக்கு ஏற்ப வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்வதே இச்சோதனையின் முக்கிய நோக்கமாகும்.
முக்கிய வர்த்தகப் பகுதிகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த அமலாக்க நடவடிக்கையில், வியாபாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதுடன், ஊராட்சி விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் இரவுச் சந்தையில் மட்டும் மொத்தம் 17 அபராதங்கள் விதிக்கப்பட்டதாக MPS தெரிவித்துள்ளது.
இதில், வியாபார உரிமம் இல்லாமல் செயல்பட்டது தொடர்பில் ஒன்பது வழக்குகளும், உரிமம் பெற்றிருந்தபோதிலும் வியாபார நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்களைப் பணியமர்த்திய இரண்டு வழக்குகளும், வியாபாரம் நடைபெற்ற நேரத்தில் உரிமம் பெற்றவர் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லாதது தொடர்பில் ஆறு வழக்குகளும் அடங்கும்.
இதனிடையே, பண்டார் கன்ட்ரி ஹோம்ஸில் ஜாலான் பூசாட் 1A பகுதியில் மேலும் இரண்டு அபராதங்களும், பெக்கான் ராவாங்கில் ஜாலான் வெல்மானில் நான்கு அபராதங்களும் MPS அமலாக்க அதிகாரிகளால் விதிக்கப்பட்டன.
இந்த ஆறு வழக்குகளும் செல்லுபடியாகும் வியாபார உரிமம் இன்றி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகப் பதிவு செய்யப்பட்டதாக ஊராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
மொத்தம் விதிக்கப்பட்ட 23 அபராதங்களும் முன்னறிவிப்பு வழங்கப்படாமலேயே நேரடியாக விதிக்கப்பட்டதாகவும், வியாபாரப் பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் MPS உறுதிப்படுத்தியுள்ளது.







