ஷா ஆலாம், செப். 7: குவா மூசாங்கில் உள்ள குனுங் டிரான்ஸ் கெரா மலையை ஏறச் சென்ற 9 வயது சிறுவன் உட்பட 6 பேர் காணவில்லை.
காணமல் போனவர்கள் சிலாங்கூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் நான்கு பேர் மற்றும் இரு மலை வழிகாட்டிகள் ஆவர்.
காணாமல் போனவர்களின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயக்குநர் ஃபர்ஹான் சுஃப்யான் போர்ஹான் தெரிவித்தார்.
அவர்களில் 49 வயதான ஷாஃபீ சிடேக் மற்றும் 43 வயதான ஹஸ்மான் மாமாட் ஆகிய இருவர் மலை வழிகாட்டிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற நால்வர் 39 வயதான வான் அஹ்மாட் அஸ்லாம் வான் ஸைருடின், அவரது 39 வயது மனைவி சித்தி ஸுலைக்கா நோரிஸான் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளான 13 வயது தியா ரைஷா, 9 வயது அஹ்மாட் ராயிஃப் ஆகியோர் என ஃபர்ஹான் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி குவா மூசாங்கில் இருந்து அந்த நான்கு குடும்ப உறுப்பினர்களும் தங்களது மலை ஏறும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
அவர்கள் இரு மலை வழிகாட்டிகளுடன் இணைந்து பயணத்தை மேற்கொண்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை பேராக்கில் உள்ள போஸ் கெமார் பகுதிக்கு சென்றடைய வேண்டியிருந்தது.
எனினும், எதிர்பார்த்தபடி அவர்கள் அங்கு சென்றடையாததுடன், ஆறு பேரையும் இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காணாமல் போன நான்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இரு மலை வழிகாட்டிகளைத் தேடும் மீட்பு நடவடிக்கை (SAR) இன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.







