புத்ராஜெயா, 13 ஜூலை – கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) ரஷ்யாவில் உள்ள எல்ப்ரஸ் சிகரத்தில் ஏறும் போது மலேசியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் பயண ஏற்பாட்டாளர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட எல்ப்ரஸ் சிகர மலையேற்றப் பயணத்தில் பங்கேற்ற மூன்று மலேசியர்களில், துரதிர்ஷ்டவசமாக ஓரு நபர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாஸ்கோவில் உள்ள மலேசிய தூதரகம் மலேசியாவில் உள்ள பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரையும், அவருடன் சென்றிருந்த மற்ற இரு மலேசியர்களையும் உடனடியாகத் தொடர்புகொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து தூதரக உதவிகளையும், உரிய ஆலோசனைகளையும் வழங்குவதற்கும், அடுத்தகட்டப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் தூதரகம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மாஸ்கோ மலேசிய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு, நிலைமைகளை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அனைத்துப் நடைமுறைகளும் சுமுகமாக நடப்பதற்கேற்ற தேவையான தூதரக உதவிகள் தங்குதடையின்றி வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சு உறுதியளித்துள்ளது.
இந்த இக்கட்டான வேளையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வெளியுறவு அமைச்சு தனது ஆழந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
தெற்கு ரஷ்யாவில் அமைந்துள்ள எல்ப்ரஸ் சிகரம், 5,642 மீட்டர் உயரத்தைக் கொண்ட ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமாகும் என்பதுடன், இது உலகெங்கிலும் உள்ள மலையேற்ற வீரர்களின் முக்கியத் தேர்வாக விளங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.







