புத்ராஜெயா: அனக் கிராகாதாவ் எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் காரணமாக ஜகார்த்தா சுகர்ணோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஜகார்த்தா செல்லும் பயணிகள் விமான நிலையத்துக்குப் புறப்படுவதற்கு முன்னர் தங்களது விமானப் பயண நிலவரத்தைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு சமீபத்திய விமான நிலவரத்தை அறிந்துகொள்ளுமாறு மலேசியா விமான நிலைய நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
விமான நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அது மீண்டும் திறக்கப்படும் நேரம் தொடர்பான அறிவிப்புகள் நிலவரத்துக்கு ஏற்ப வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் சிங்கப்பூர், ஹோங்கோங், சிட்னி, சியோல்/இன்சியோன், தோஹா, ஆம்ஸ்டர்டாம் மற்றும் கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்ததாகக் கிடைக்கும் விமானத்தில் தங்களது பயணத்தை மாற்றியமைத்துக்கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என Batik Air தெரிவித்துள்ளது.
AirAsia நிறுவனமும் நிலைமை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பயணிகள் விமான நிலையத்துக்குச் செல்வதற்கு முன்னர் தங்களது விமான நிலவரத்தைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அனக் கிரகட்டாவ் எரிமலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி முதல் தொடர்ந்து வெடிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக சில பகுதிகளில் எரிமலைச் சாம்பல் பல ஆயிரம் மீட்டர் உயரம் வரை பரவியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, ஜகார்த்தா அல்லது சுகர்ணோ-ஹட்டா விமான நிலையம் வழியாகப் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகள், விமான நிலையத்துக்குப் புறப்படுவதற்கு முன் தங்களது விமான நிறுவனங்களிடம் சமீபத்திய நிலவரத்தை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







