பெட்டாலிங் ஜெயா: நேபாள அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, மலேசிய சிறப்புப் பேரிடர் உதவி- மீட்புக் குழுவினர் (SMART) நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 5) அதிகாலையிலேயே அந்நாட்டிற்கு புறப்படவிருக்கின்றனர்.
மலேசிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, 11 பேர் கொண்ட இந்த மீட்புக் குழுவினர், நேபாள அதிகாரிகள் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அதிநவீன ட்ரோன்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களுடன் அங்குச் செல்லவுள்ளனர்.
"பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படும் தேவைகள் மற்றும் பாதுகாப்புச் சூழல்களின் அடிப்படையில், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பிரத்யேக மீட்புத் திறன்கள் தேவைப்படும் இடங்களில் இக்குழுவினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதனிடையே அமைச்சால் அனுப்பப்பட்ட கூடுதல் குழு ஒன்று ஏற்கனவே காத்மாண்டுவைச் சென்றடைந்துள்ளது.
இதுவரை தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களைத் தேடி, அடையாளம் காணும் பணிகளில், நேபாள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட அக்குழுவினர் , அங்குள்ள மலேசிய தூதரகத்திற்கு உதவி வருகின்றனர்.
இதில் அடையாளம் காணும் நோக்கத்திற்காக மரபணு(DNA) மாதிரிகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புகளும் அடங்கும்" என்று அமைச்சு இன்று (செப்டம்பர் 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மலேசியாவில், அடையாளம் காணும் பணிளுக்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. வெளியுறவு அமைச்சின் ஒருங்கிணைப்புடன், அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மலேசிய வேதியியல் துறை ஆகியவை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமிருந்து மரபணு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் இதற்கு முன்னர், நேபாளத்திற்கு ஸ்மார்ட் குழுவினரை அனுப்பி வைப்பதோடு , 10 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகள் செய்யப்படுமென அறிவித்திருந்தார்.







