கோலாலம்பூர், செப் 4 : வெளியுறவு அமைச்சின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) நிலவரப்படி, 55 மலேசியர்களை இன்னும் தொடர்புக் கொள்ள முடியவில்லை.
"அமைச்சு அவர்களின் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்பில் உள்ளது. தேடுதல் மற்றும் சரிபார்ப்புப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்குத் தொடர்ந்து தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன .
தனிப்பட்ட நபர்கள் குறித்த விபரங்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் அதே வேளையில், பொதுமக்களுக்கான அறிவிப்புகள் சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களாக மட்டுமே இருக்கும்" என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், நேபாளத்தில் இருக்கும் மலேசியர்களுக்கும், சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலேசியர்களுக்கும் இடையே ஏதேனும் தகவல்கள் முரண்பட்டிருக்கின்றனவா (overlap) என்பது குறித்து தூதரக வழிகள் மூலம் சீனாவுடன் மலேசியா தொடர்ந்து சரிபார்த்து வருகிறது.
"பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகம் சீன அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. அதே நேரத்தில், கோலாலம்பூரில் உள்ள சீன தூதரகத்திடமிருந்தும் அதிகாரப்பூர்வ விளக்கத்தைப் பெற அமைச்சு முயன்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிகாரிகளுக்குத் தேவைப்படும் பட்சத்தில், தகுந்த தேடுதல் மற்றும் மீட்பு நிபுணத்துவ உதவிகளை வழங்க மலேசியா தயாராக இருப்பதையும் தெரிவித்துள்ளது.







