பாசிர் புத்தே, செப்.4: போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வெளிநாடுகளில் மலேசியர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நாட்டில் செயல்படும் குற்றவியல் கும்பல்களை அடையாளம் காண அதிகாரிகளுக்கு முக்கிய தகவல் ஆதாரமாக விளங்கி வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளில் நாட்டில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தத் தகவல்களின் அடிப்படையில் மலேசிய அதிகாரிகள் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் கைது செய்யப்படும் மலேசியர்கள் தனிப்பட்ட முறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்களா அல்லது திட்டமிட்ட குற்றவியல் வலையமைப்பின் ஒரு பகுதியாகச் செயல்பட்டார்களா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக அமைச்சர் கூறினார்.
அதேவேளை, மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நாடுகளின் இறையாண்மையையும் அந்நாடுகளின் சட்டங்களையும் மலேசியா மதிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டின் நுழைவாயில் பாதுகாப்பு, குறிப்பாக விமான நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சைஃபுடின் குறிப்பிட்டார்.
இதற்காக உள்துறை அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து 17 அம்சங்களைக் கொண்ட முன்மொழிவை அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார்.







