ஷா ஆலாம், செப். 3: பொது இடங்களின் தூய்மையைப் பேணுவது ஊராட்சி மன்ற அதிகாரிகள் அல்லது துப்புரவுப் பணியாளர்களின் பொறுப்பு மட்டும் இல்லை.
அனைவரும் தங்களது சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாப்பதில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என துணை உயர்கல்வி அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹலிம் வலியுறுத்தியுள்ளார்.
சமூகத்தில் தூய்மையை நிலைநாட்டும் முயற்சிகள் ஒவ்வொரு தனிநபரும் தமது சுற்றுப்புறத்தைப் பராமரிப்பதில் இருந்து தொடங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சமூகத்தில் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்களின் தீவிர பங்களிப்பு அவசியமாகும். இதில் குறிப்பாக இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நகரின் தூய்மையையும் சுற்றுசூழலையும் மேம்படுத்தும் முயற்சிகள் சிறிய நடவடிக்கைகளில் இருந்தே தொடங்க முடியும் என்றார் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் கியான் யோங்.
குறிப்பாக, மாணவர்கள் தங்களது வகுப்பறைகள் மற்றும் வசிப்பிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளின் தூய்மையைப் பேண மேற்கொள்ளும் எளிய நடவடிக்கைகள் கூட நகர மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும் என்றார் அவர்.







