ஷா ஆலாம், ஆகஸ்ட் 10 — சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களின் (PBT) புகார்கள் மற்றும் சேவைகளை ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைக்க ‘சூப்பர் செயலி’ -ஐ உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதனை மாநில உள்ளாட்சி மற்றும் சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் தெரிவித்தார்.
தற்போது, மாநிலத்தின் ஊராட்சி மன்றங்களின் சேவைகளைப் பெறுவதற்கும் புகார்களைப் பதிவு செய்வதற்கும் பொதுமக்கள் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதாக அவர் கூறினார்.
இதனால் எந்த செயலியைப் பயன்படுத்துவது என்பது குறித்து பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது.
‘சூப்பர் செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டால், ஊராட்சி மன்றங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தையும் ஒரே தளத்தின் வாயிலாக சமர்ப்பிக்க முடியும்.
பின்னர் அவை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்திக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இங் சுயி லிம் தெரிவித்தார்.
எனினும், டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த தெரியாதவர்களை குறிப்பாக மூத்த குடிமக்களைப் புறக்கணிக்கும் வகையில் அமையக்கூடாது என்றும் இங் சுய் லிம் வலியுறுத்தினார்.
இதனால், பொதுமக்கள் நேரடியாகச் சென்று சேவைகளைப் பெறுவதற்காக ஊராட்சி மன்றங்களில் நேரடி சேவை மையங்களும் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
அதேவேளை டிஜிட்டல் செயலிகளைப் பயன்படுத்துவது குறித்து அவர்களுக்கு வழிகாட்டுதலும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.







