செப்பாங், செப். 2: செப்பாங் நகராட்சி மன்றத்தில் எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற 27 மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கல்விச் சாதனையை அங்கீகரிப்பதோடு, அவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஊக்கத்தையும் வழங்குவதே இதன் நோக்கமாகும்.
‘பெர்மாத்தா ஹராப்பான் செப்பாங் 2026’ எனும் திட்டத்தின் வாயிலாக அந்த மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களின் வெற்றியைப் பாராட்டும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக MPSepang தலைவர் டாக்டர் அனி அகமட் தெரிவித்தார்.
இந்த 27 மாணவர்களும் முன்னதாக MPSepang செயல்படுத்திய ‘Back To School 2025’ திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிறப்பான தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் டாக்டர் அனி தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு, தியாகம் மற்றும் வழிகாட்டுதலுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
கல்வி என்பது தனிநபரின் எதிர்காலத்தை மட்டுமன்றி, ஒரு சமூகத்தின் நீண்டகால வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைகிறது என்ற அடிப்படையில், கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை MPSepang தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.






