கோலாலம்பூர், ஆக. 29: இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அம்பாங் தேசியப் பள்ளி (SK Ampang) எதிரே அமைந்திருந்த உணவகம் மற்றும் பொருட்களைச் சேமித்து வைக்கும் அறை 80 விழுக்காடு எரிந்து சேதமடைந்தன.
இச்சம்பவம் குறித்து அதிகாலை 3.46 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரியெசால் அஸ்பார் கூறினார்.

இந்தத் தீயணைப்பு நடவடிக்கையில் அம்பாங், பண்டான் இண்டா, கெராமாட் மற்றும் ஹங் துவா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 18 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதிகாலை 4.42 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், காலை 8.30 மணியளவில் தீ முற்றாக அணைக்கப்பட்டதாகவும் அஷ்ருல் ரியெசால் கூறினார்.
இந்தத் தீ விபத்தில் யாரும் காயமடைந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ தகவல் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.







