கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து , சீனா, திபெத் கைலாச மலைக்கு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டிருந்த 17 மலேசியர்களைத் தொடர்புக் கொள்ள முடியாமல் உள்ளது.
இதனால் தங்களது உறவுகளின் நிலை குறித்து அறியாது குடும்ப உறுப்பினர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
தனது நான்கு குடும்ப உறுப்பினர்களை இதுவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக ஆர். லோகதஷ்னி தெரிவித்தார்.
59 வயதான தனது தந்தை, 54 வயது தாயான எ. நீலவேணி, 60 வயது உறவினர் எஸ்.முருகன், 58 வயது ஜி. பத்மாவதி ஆகியோர் நேபாளத்தை தளமாகக் கொண்ட Fishtail Tours & Travels சுற்றுலா நிறுவனம் மேற்கொண்ட பயணத்தில் இடம்பெற்றிருந்தனர்.
அக்குழுவினர் இம்மாதம் 23-ஆம் தேதி, நேபாளத்தை சென்றடைந்ததாகவும், செப்டம்பர் 5-ஆம் தேதி வரை, ஆன்மீகப் பயணத்தைத் தொடர திட்டமிட்டிருந்ததாகவும் லோகதஷ்ணி பெர்னாமா ஊடகத்திடம் கூறினார்.
" கடைசியாக அக்குவினருடன் நேபாள உள்நாட்டு நேரப்படி நேற்று காலை மணி 8. 18-க்குத் தொடர்பு கொண்டோம். நேபாளம் - திபெத் குடிநுழைவு துறையின் பரிசோதனைச் சாவடியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது தொடர்பு கொண்டோம். அதன் பின்னர் அவர்களுடனான தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன . சுற்றுலா நிறுவனத்தையும், மலேசிய தூதரகத்தையும் தொடர்புக் கொள்ள முயன்றோம். ஆனால் , இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை " என லோகதஷ்னி கூறினார்.
இதனிடையே, எவரெஸ்ட் மலையேறி என்.மோஹனதாஸ் தலைமையில் திபெத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருக்கும் மற்றொரு குழுவினர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தங்களது குழுவினரும், பயணப் பாதையும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை எனவும், பாதுகாப்பாக பயணத்தைத் தொடர்வதாகவும் மோஹனதாஸ் கூறினார்.
அவரது பயணக் குழுவில் மொத்தம் 56 பேர் இடம்பெற்றுள்ளனர்.








