ஷா ஆலாம், ஆகஸ்ட் 26: ஷா ஆலாம் செக்ஷன் U14, ஜாலான் ஹம்ஸா சாலையில் பட்டாசு வெடித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர்களை ஷா ஆலாம் போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலான 35 விநாடி காணொளியைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு குழுவைச் சேர்ந்த ஆண்கள் சாலையின் நடுவில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தது பதிவாகியுள்ளதாகத் ஷா ஆலம் மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சருடின் சமா தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் இன்று Threads சமூக ஊடகத்தில் பரவியதைத் தொடர்ந்து, புக்கிட் ஜெலுத்தோங் போலீஸ் நிலையத் தலைவர் புகார் அளித்ததாக அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையின்படி, இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 4.22 மணியளவில், இறப்பு ஊர்வலம் ஒன்று பிளிஸ் கார்டன் செத்தியா ஆலம் மயானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இந்த வழக்கு 1957ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் 7ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக சருடின் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சம் 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் ராஸி சஹாரியை 019-5717076 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.







