செப்பாங், ஆகஸ்ட் 19 — கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) முனையம் 1-இல் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட 27 வயதான சீனப் பெண் ஒருவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.19 மணியளவில், அப்பெண் சீனாவுக்குத் திரும்பும் விமானத்திற்காகக் காத்திருந்தபோது நிகழ்ந்ததாக KLIA மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் எம். ரவி தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்கள் நிலைமையைச் சமாளித்து, அப்பெண்ணை முனையம் 1-இன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அப்பெண் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தனது நண்பருடன் சுற்றுலாப் பயணியாக மலேசியாவுக்கு வந்ததும், ஆகஸ்ட் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சீனாவுக்குத் திரும்பும் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையில், அப்பெண் மேல் சிகிச்சைக்காகக் காஜாங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக ரவி கூறினார்.
இச்சம்பவம் தொடர்பான 22 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகமான X தளத்தில் முன்னதாக வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.







