ஜொகூர் பாருவில் 20 ஆகஸ்ட்: ஜோகூர் மாநிலத்தில் தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கை தலைகீழாக ஏற்றியதாக இதுவரை மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று சம்பவங்களும் கூலை, பெலாங்கி இண்டா மற்றும் இஸ்கண்டார் புத்ரி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்ததாக ஜோகூர் மாநில துணை காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூ சுவான் ஹுவாட் கூறினார்.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவாதாக செய்தியாளர் சந்திப்பில் ஹூ சுவான் ஹுவாட் கூறினார்.
இதனிடையே, அனைத்து தரப்பினரும், குறிப்பாக வர்த்தக மற்றும் தொழில் வளாகங்களின் உரிமையாளர்கள், தேசியக் கொடியை முறையாகவும் சரியான நிலையிலும் ஏற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, தேசியக் கொடியை ஏற்றும் பணியை ஊழியர்களிடம் ஒப்படைக்கும் போது, எவ்வாறு சரியான முறையில் ஏற்ற வேண்டும் என்பது தொடர்பில் உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறும் அவர் ஹூ சுவான் ஹுவாட் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் இத்தகைய பணிகள் ஒப்படைக்கப்படும் நிலையில், முதலாளிகள் மற்றும் வளாக உரிமையாளர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
நாட்டின் தேசியக் கொடியை உரிய மரியாதையுடனும் சரியான முறையிலும் கையாள்வது ஒவ்வொரு தரப்பினரின் பொறுப்பாகும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.







