கோலா நெருஸ், ஆகஸ்ட் 26: இன்று அதிகாலை கம்போங் தோக் ஜெம்பாலில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தையும் அவரது 9 வயது மகனும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 40 வயதுடைய ஆடவர் மற்றும் அவரது 9 வயது மகன் என கோலா திரங்கானு மாவட்டக் காவல் துறைத் தலைவர் துணை கமிஷனர் அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து அதிகாலை சுமார் 4 மணியளவில் தகவல் கிடைத்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியிலும், வீட்டுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
கோலா நெருஸ் மற்றும் கோலா திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 16 தீயணைப்பு வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அஸ்லி தெரிவித்தார்.
எனினும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள மொத்த சேத மதிப்பு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.







