சுரபாயா, ஆகஸ்ட் 11 — இந்தோனேசியாவின் பல பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
அதனால், அந்நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகள் இன்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளன.
நீண்ட வறட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே இந்தப் புகைமூட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், எல் நினோ காலநிலை நிகழ்வு நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருணை ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் போர்னியோ தீவில் அமைந்துள்ள மேற்கு கலிமந்தான் மாகாணத்தின் பொந்தியானா நகரிலும் புகைமூட்டம் கடுமையாக பாதித்துள்ளது.
நகரின் பிற பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து பரவிய புகை, பொந்தியானாக் நகரைச் சூழ்ந்ததைத் தொடர்ந்து, நகர மேயர் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருக்கும் வரை மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எத்தனை பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த குறிப்பிட்ட எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
இந்த ஆண்டு இந்தோனேசியா வழக்கத்தைவிட கடுமையான வறட்சிக் காலத்தை எதிர்கொள்ளும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் BMKG எச்சரித்துள்ளது.







