ஷா ஆலம், ஆகஸ்ட் 24 - சரவாக், கெடா, பினாங்கு ஆகிய மாநிலங்களுடன் , இன்று காலை 8 மணி நிலவரப்படி சிலாங்கூரிலும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீடு பதிவாகியது.
சிலாங்கூரில் , ஜோஹான் செத்தியாவில் காற்றுத் தரக் குறியீடு 161 -ஆகவும், குவாலா சிலாங்கூரில் 132 -ஆகவும் பதிவு செய்யப்பட்டன.
அதிகமான பகுதிகள் பாதிக்கப்பட்ட மாநிலமாக சரவாக் தொடர்ந்து நீடிக்கிறது. அங்குள்ள செரியன் மாவட்ட காவல்துறை தலைமையகப் பகுதியில் 189 என்ற குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூச்சிங் 175, சமரஹான் 170, ஸ்ரீ அமான் 158 மற்றும் பிந்துலு 108 ஆகிய குறியீடுகளைப் பதிவு செய்துள்ளன.
மேலும் கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி 155 மற்றும் அலோர் ஸ்டார் 151 ஆகிய குறியீடுகளையும், பினாங்கு இன்று காலை 139 என்ற குறியீட்டையும் பதிவு செய்ததாக மலேசிய காற்றுத் தரக் குறியீட்டு நிர்வாக முறையின் இணையப்பக்கத் தரவு குறிப்பிடுகிறது.
இதனிடையே, நாடு முழுவதும் மொத்தம் 58 பகுதிகள் இன்று காலை நிலவரப்படி மிதமான காற்றுத் தரத்தைப் பதிவு செய்தன.
இதே காலகட்டத்தில் நல்ல நிலை, மிகவும் ஆரோக்கியமற்ற நிலை அல்லது அபாயகரமான நிலை ஆகிய குறியீடுகளை எந்தவொரு பகுதியும் பதிவு செய்யவில்லை.
பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டறிய, சுற்றுச்சூழல் துறை 68 கண்காணிப்பு நிலையங்கள் மூலம் நாட்டின் சுற்றுப்புறக் காற்றுத் தரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.







