கோலாலம்பூர், ஆகஸ்ட் 21- நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
குறிப்பாக, பல்வேறு திசைகளிலிருந்து புகைமூட்டம் மாநிலத்திற்குள் நுழைவதால், சரவாக்கின் பல பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீட்டைப் பதிவு செய்துள்ளன.
சுற்றுச்சூழல் துறை காற்றின் தரத்தைக் கண்காணித்து வரும் அதே வேளையில், திறந்தவெளியில் தீ வைப்பதற்கு சாத்தியமுள்ள பகுதிகளில் தினசரி ரோந்துப் பணிகளையும், சட்ட அமலாக்கத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.
சரவாக்கில் உள்ள ஒரு பகுதி 'மிகவும் ஆரோக்கியமற்ற' காற்றின் தரத்தையும், ஒன்பது பகுதிகள் 'ஆரோக்கியமற்ற' அளவையும் பதிவு செய்துள்ளதாகக சுற்றுச்சூழல் துறை இன்று வெளியிட்டட அறிக்கையில் தெரிவித்தது.
நாடு தழுவிய அளவில் மற்ற 56 பகுதிகள் 'மிதமான' அளவையும், இரு பகுதிகள் 'நல்ல' அளவையும் பதிவு செய்துள்ளது.
செரியான் மாவட்ட போலீஸ் தலைமையகப் பகுதியில், நாட்டின் மிக உயர்ந்த காற்றுத் தூய்மைக் கேடு (API) 227-ஆகப் பதிவானது.
அதைத் தொடர்ந்து ஸ்ரீ அமான் (187), கூச்சிங் (176), சமரஹான் (175) மற்றும் சரிகேய் (174) ஆகிய பகுதிகள் உள்ளன.
சிபு (157), பிந்துலு (154), சமலாஜு (154), கபிட் (130) , முக்கா (130) ஆகிய இடங்களிலும் ஆரோக்கியமற்ற அளவு பதிவாகின.
முன்னதாக, மலேசியா கடுமையான புகைமூட்டத்தைக் கொண்டுவரக்கூடிய வலுவான 'எல் நினோ' (El Nino) பருவநிலைக்குத் தயாராகி வருவதாக இயற்கை வள- சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் கூறியிருந்தார்.







