ஷா ஆலம்,ஆகஸ்ட் 23 : இன்று காலை 8:15 மணி நிலவரப்படி, மலேசியா முழுவதும் மொத்தம் எட்டு பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தர நிலையைப் பதிவு செய்துள்ளன.
அதே வேளை, 60 பகுதிகள் மிதமான பிரிவில் உள்ளன.
சரவாக்கில் ஐந்து இடங்களும், சிலாங்கூர், கெடா மற்றும் பேராக்கில் தலா ஓர் இடமும் ஆரோக்கியமற்ற அளவைப் பதிவு செய்துள்ளன.
இதில் செரியன் 198, கூச்சிங் 185, ஸ்ரீ அமான் 178, சமரஹான் 177, சிலாங்கூரின் ஜோஹான் செத்தியா 155, சரிகேய் 128, கெடாவின் சுங்கை பட்டாணி 127 மற்றும் பேராக்கின் தைப்பிங் 116 ஆகிய அளவுகளைப் பதிவு செய்துள்ளன.
சில இடங்களில் காற்றின் தரம் சற்று மேம்பட்டதால், பல முக்கிய பகுதிகள் மிதமான நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.
சிலாங்கூரின் ஷா ஆலாம் 96 என்ற அளவையும், மலாக்காவின் புக்கிட் ரம்பாய் முன்பு இருந்த ஆரோக்கியமற்ற நிலையிலிருந்து குறைந்து 93 என்ற அளவையும் பதிவு செய்துள்ளன.
மேலும் புத்ராஜெயா 89, கோலாலம்பூர் 87, பெர்லிஸின் கங்கார் 84 மற்றும் ஜொகூரின் தங்காக்க் 84 ஆகிய அளவுகளில் உள்ளன.
அத்துடன் ஜொகூரின் பத்து பகாட் மற்றும் பாசிர் கூடாங் ஆகிய இரு இடங்களும் 83, சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயா 81 மற்றும் கிளாந்தானின் தானா மேரா சற்று தெளிவான நிலையாக 65 என்ற அளவையும் கொண்டுள்ளன.
பொதுவான வழிகாட்டுதலின்படி, காற்று மாசடைவுக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் நன்று, 51 முதல் 100 வரை மிதமானது, 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது மற்றும் 300க்கு மேல் இருந்தால் அது அபாயகரமானது எனக் கருதப்படுகிறது.







