கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 - நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் புகை மூட்டம் அடுத்த 3-லிருந்து 5 நாட்களுக்குள் குறைவதற்கு வாய்ப்பில்லை என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தெரிவித்தது.
சில பகுதிகளில் மழை பெய்யுமென கணிக்கப்பட்டிருந்தாலும், பரவலான காற்றுத் தரத்தை மீட்டெடுக்க அது போதுமானதாக இருக்காது .
வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை, நிலநடுக்க செயல்பாட்டு மையத்தின் மூத்த இயக்குனர் மக்ருன் ஃபட்ஸ்லி முகமட் ஃபஹ்மி அதனைத் தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில், தற்போதைய வறண்ட நிலைக்குப் பதிலாக சிறிய அளவில் மழை பெய்யக்கூடும்.ஆனால், அந்த சிறிய மழையால் புகை மூட்டத்தை அகற்ற முடியாது என அவர் பெர்னாமா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
சரவாக்கின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பனிமூட்டம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதன் காரணமாக நேற்று செரியான் (Serian) பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதாகவும் மக்ருன் கூறினார்.
வழக்கமாக மே முதல் செப்டம்பர் வரை வீசும் தென்மேற்கு பருவமழை, வறண்ட வானிலை மற்றும் குறைந்த மழையுடன் இந்த புகைமூட்ட நிலைமையை மேலும் மோசமாக்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.
"நமக்கு அதிக மழை கிடைக்காதபோது, வானிலை மிகவும் வெப்பமாக இருக்கும். இந்த வெப்பமான வானிலை காடுகளில் தீப்பிடிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த எரிப்பிலிருந்து, புகை மற்றும் புகை மூட்டம் உருவாகிறது," என்று அவர் கூறினார்.
காட்டுத் தீயைக் கண்டறிய செயற்கைக்கோள் படங்களின் மூலம் ஹாட்ஸ்பாட்களை (Hotspots) மலேசிய வானிலைத் துறை கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று மதியம் நிலவரப்படி, மலேசிய காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு நிர்வாக அமைப்பின் அகப்பக்கம், 10 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரத்தைக் காட்டியுள்ளன.
ஜோஹான் செத்தியா ( சிலாங்கூர்) செராஸ் ( கோலாலம்பூர்) மின்டென் ( பினாங்கு ) சமரஹான் , செரியான், கூச்சிங் , ஸ்ரீ அமான் , சரிகேய் , முக்கா ,சிபு ( சரவாக்) ஆகியவை அந்த இடங்களாகும்.







