ஷா ஆலாம், ஆகஸ்ட் 18: சிலாங்கூரின் ஜோஹான் செத்தியா பகுதியில் இன்று காலை 9.10 மணி நிலவரப்படி காற்று மாசு குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
மலேசிய காற்று மாசு குறியீட்டு மேலாண்மை அமைப்பான APIMS வெளியிட்ட தரவின்படி, ஜோஹான் செத்தியா கண்காணிப்பு நிலையத்தில் காலை 9.10 மணிக்கு IPU 159 என்ற அளவு பதிவாகியுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள 65 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் பதிவாகியுள்ளது.
அதேவேளை, கெடாவில் உள்ள லங்காவி மற்றும் பெர்லிஸில் உள்ள கங்கார் ஆகிய இரண்டு பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக நிலவி வரும் ஈரப்பதமான வானிலை காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சரவாக் பகுதிகளில் காணப்பட்ட புகைமூட்ட நிலை ஓரளவு மேம்பட்டுள்ளது.
எனினும், நாடு செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழைக் காலத்தை எதிர்நோக்கியுள்ளதால் திறந்தவெளி எரிப்புகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் மீண்டும் புகைமூட்டம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் எச்சரித்துள்ளார்.







