
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 23 : 2026 சுக்மா காற்பந்து இறுதிப்போட்டியில், ஜொகூர் அணியிடம் பெனால்டி முறையில் 2-4 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியுற்ற சிலாங்கூர் அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
நேற்று இரவு எம்பிபிஜே (MBPJ) அரங்கில் நடைபெற்ற விறுவிறுப்பு நிறைந்த அப்போட்டியில், 120 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி முறை பயன்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் ஆட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள சிறிது நேரம் எடுத்ததாகவும், தங்களுக்குள் ஏற்பட்ட அழுத்தமே தங்களின் செயல்திறனைப் பாதித்தது என்றும் சிலாங்கூர் அணியின் கேப்டன் முஹம்மட் அபு காலில் ஒப்புக்கொண்டார்.

"ஆட்டத்தின் தொடக்கத்தில் நாங்கள் வேகத்தை எட்ட தாமதமானது. எங்களுக்குள் நாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டோம். கோல் அடிக்கும் வாய்ப்புகளில் நாங்கள் இன்னும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
இருப்பினும், 120 நிமிடங்கள் வரை சளைக்காமல் போராடி போட்டியை 1-1 என சமப்படுத்த முயற்சித்த அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்," என்று அவர் மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், சிலாங்கூர் அணியின் பயிற்சியாளர் ஐ. அருள்செல்வன், மிகக் கடுமையான ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் காட்டிய அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
நெருக்கடியான போட்டி அட்டவணைக்கு மத்தியிலும், மிகக் குறுகிய கால ஓய்விற்குப் பிறகு வீரர்கள் மீண்டும் களமிறங்கி விளையாடுவது எளிதான காரியம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
"இரு அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். இதுபோன்ற ஒரு நெருக்கடியான போட்டி அட்டவணையில் விளையாடுவது எளிதல்ல. ஒரு சுற்று முடிந்து, சிறிய ஓய்விற்குப் பிறகு உடனடியாக அடுத்த போட்டியில் விளையாட வேண்டியிருந்தது. இந்த ஆட்டம் மிகத் தரமானதாக இருந்தது, இதில் நான் உண்மையிலேயே திருப்தி அடைகிறேன். இளம் வீரர்கள் தங்களின் எதிர்காலத்திற்கு இதுபோன்ற போட்டிகளில் இருந்துதான் அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.
இந்த பெனால்டி தோல்வியின் மூலம், சிலாங்கூர் அணி 2026 சுக்மா கால்பந்து போட்டியை இரண்டாம் இடத்துடன் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
ஜொகூர் அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய வேளையில், பேராக் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.








