ஜொகூர் பாரு, ஆகஸ்ட் 22: இவ்வாண்டு ஜூலை 15 ஆம் தேதி வரை, மோசடி கூறுகளைக் கொண்ட மொத்தம் 99,693 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கப்பட்டன.
இது 2025 ஆம் ஆண்டு முழுவதும் நீக்கப்பட்ட 98,503 பதிவுகளை விட அதிகமாகுமென தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
மெட்டா (Meta), டிக்டாக் (TikTok) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற சமூக ஊடகத் தளங்களுக்குப் பதிவுகளை நீக்குமாறு அனுப்பப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு முழுவதும் 102,113 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 106,268 கோரிக்கைகளாக அதிகரித்ததாக அவர் கூறினார்.
MCMC - மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம்) மூலம் இக்கோரிக்கைகள் அனுப்பப்பட்டாலும், அந்தப் பதிவுகளை நீக்குவதா இல்லையா என்ற இறுதி அதிகாரம் சமூக ஊடகத் தளங்களிடமே உள்ளது.
இதனால் புள்ளிவிவரங்களில் சிறிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும், மோசடி (Scam) தொடர்பான சம்பவங்களில் , சமூக ஊடகத் தளங்களின் ஒத்துழைப்பு விகிதம் வழக்கமாக 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்," என அவர் குறிப்பிட்டார்.
தாமான் டேசா ஸ்குடாய் மக்கள் மண்டபத்தில் நடைபெற்ற ஜொகூர் மாநில அளவிலான 'மடானி கித்தா' நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்விபரங்களை வெளியிட்டார்.

இதற்கிடையில், சுதந்திர மாதத்தை முன்னிட்டு, தேசியக் கொடி நாட்டின் முக்கிய சின்னம் என்பதால், பொதுமக்கள் 'ஜாலூர் கெமிலாங்' (Jalur Gemilang) தேசியக் கொடியை முறையான விதிமுறைகளின்படி ஏற்றுவதை உறுதி செய்யுமாறு தியோ நினைவூட்டினார்.
தேசியத் தகவல் துறை (JaPEN), ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான தேசிய மாதக் கொண்டாட்டத்தின் போது, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொடியேற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் "1 வீடு 1 ஜாலூர் கெமிலாங்" (1Rumah 1Jalur Gemilang) பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
பொதுமக்கள் தேசியக் கொடியை முறையாக ஏற்றுவதற்கு நினைவூட்டும் ஒரு முயற்சியாக இது அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.






