டுங்குன், ஆகஸ்ட் 16 — போலி இணைய முதலீட்டு திட்டத்தை நம்பி, பெண் மருத்துவர் ஒருவர் RM558,000 தொகையை இழந்தார்.
32 வயதுடைய அந்த மருத்துவர், வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான பயிற்சி வழங்கப்படுவதாகக் கூறிய விளம்பரத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பார்த்துள்ளார்.
முதலில் இன்ஸ்டாகிராம் வாயிலாக தொடர்புகொண்ட மருத்துவர், பின்னர் ‘வான்’ என அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு சந்தேக நபரை WhatsApp மூலம் தொடர்பு கொண்டுள்ளார் என டுங்குன் மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் நிக் அப்துட் ஹலிம் நிக் மாட் தெரிவித்தார்.
வர்த்தக நுட்பங்கள் தொடர்பான காணொளியைப் பெறுவதற்காக ஆரம்பத்தில் RM300 செலுத்துமாறு அவரிடம் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 77 பரிவர்த்தனைகள் மூலம் RM558,000 பணத்தை அவர் செலுத்தியுள்ளார்.
எனினும், முதலீட்டில் இருந்து எந்தவொரு வருமானமும் கிடைக்காத நிலையில், அவர் மேலும் ஒரு தொகையை இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என மோசடி கும்பல் மிரட்டியுள்ளது.
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த மருத்துவர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
கவர்ச்சிகரமான வருமானம் அல்லது குறைந்த வட்டி போன்ற வாக்குறுதிகளை வழங்கும் திட்டங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.






