
ஸ்ரீ கெம்பாங்கான், ஆகஸ்ட் 22 : 2026 சுக்மா போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் சிலம்பக் கம்பு வீச்சு ( தனித்திறமை) பிரிவில் சிலாங்கூருக்கு பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்ற சிலம்ப வீரர் சர்வேஷா முரளியின் கனவு, இன்று அவர் ஆறாவது இடத்தைப் பிடித்ததால் நனவாகாமல் போனது.
செர்டாங் ஜெயாவில் உள்ள, சுபாங் ஜெயா மாநகர் மன்ற அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டியின் போது, சர்வேஷா பயன்படுத்திய சிலம்பக் கம்பு எதிர்பாராதவிதமாக அவரது கையை விட்டு நழுவியதால் அவரது அசாத்தியமான செயல்திறன் சற்று பாதிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் சற்றும் மனம் தளராத அந்த இளம் வீரர், போட்டி முடியும் வரை தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி விளையாடினார்.
இறுதியில் சர்வேஷா 8.60 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
அதே வேளையில், 9.37 புள்ளிகளைப் பெற்ற கூட்டரசு பிரதேச வீரர் தங்கப் பதக்கத்தை வென்றார். வெள்ளிப் பதக்கம் கெடா மாநிலத்திற்கும், வெண்கலப் பதக்கம் திராங்கானு மாநிலத்திற்கும் கிடைத்தன.







