பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20 — ஷா ஆலாம் எல்ஆர்டி3 ரயில் பாதையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப் பிரசாரனா மலேசியா பெர்ஹாட் நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும்போது மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை நேரடியாக அறிந்து கொள்வதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும் என பிரசரானா தர உறுதிப் பிரிவு (ஷா ஆலம் பாதை) தலைவர் நூர் அகிலா அஹ்மட் தஜேடி கூறினார்.

இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினரை நேரடியாக ஈடுபடுத்தி அவர்களின் கருத்துகளைக் கேட்க பிரசாரனா முன்வந்துள்ளதை மாற்றுத்திறனாளிகள் சென்ட்ரல் அமைப்பின் தலைவர் டத்தோ ராஸ் அடிபா ராட்ஸி வரவேற்றார்.
எல்ஆர்டி3 நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் அவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் எளிதாகச் செல்லும் வகையில் மின்தூக்கிகள் போதிய அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், மாற்றுத்திறனாளிகளின் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்த சில கூடுதல் வசதிகள் தேவைப்படுவதாகவும் ராஸ் அடிபா கூறினார்.

குறிப்பாக, மின்தூக்கி வசதி கொண்ட அதிகமான வேன்களை வழங்குவதுடன், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அமரவும் நகரவும் உதவும் வகையில் சுழலும் இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் அப்பகுதிகளில் வைக்கப்படும் அறிவிப்புப் பலகைகள் மற்றும் விதிமீறல்களுக்கான அபராதம் குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.
பொதுப் போக்குவரத்து சேவைகள் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கையில் அதிகளவில் பயன்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து சமூகத்தினர் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.







