ஷா ஆலாம், ஜூலை 31 - ஷா ஆலாம் 'எல்.ஆர்.டி 3' (LRT3) சேவைக்கான இலவசப் பயணச் சலுகையை மேலும் இரண்டு வாரங்களுக்கு ரேபிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் நீட்டித்துள்ளது.
இதன் மூலம் பயணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகையானது எல்.ஆர்.டி 3 நிலையங்களில் உள்ள இணைப் பேருந்து சேவைகள் மற்றும் பார்க் அண்ட் ரைட் (Park N' Ride) வசதிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளை இணைக்கும் இப்புதியப் பொதுப் போக்குவரத்து அமைப்பைப் பயணிகள் அனுபவிக்கவும், தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளவும் இந்த நீட்டிப்பு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இலவசப் பயணக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது அதிகமான பயனாளர்களுக்குப் பயனளிக்கும் என்றும், அன்றாடப் பயணச் செலவைக் குறைப்பதோடு நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பான மற்றும் சீரான பயணத்தை உறுதி செய்வதற்காக, பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி இந்த இலவசப் பயணக் காலத்தைப் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







