ஷா ஆலாம்,ஜூலை 7: சிலாங்கூர் மாநிலத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு நிதியுதவியான BRAIS (Bantuan Rahmah Insan Istimewa Selangor) விநியோகம், ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து படிப்படியாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இம்மாநிலத்தில் உள்ள 1,800 மாற்றுத்திறனாளிகள் பயனடைவர் என மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
மொத்தம் 4,096 விண்ணப்பங்களில் இருந்து 1,800 விண்ணப்பதாரர்கள் இந்த உதவிக்கு தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.
ஒவ்வொரு விண்ணப்பமும் வெளிப்படைத் தன்மையுடனும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தகுதிகளின்படியும் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்ய, சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் அறவாரியம் (YANIS) மூலம் தகுதிச் சரிபார்ப்பு மற்றும் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன, என அவர் மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
A பிரிவின் கீழ் உள்ள 'சிகிச்சை மையக் கட்டண உதவிக்கு' (Therapy center fee assistance) அதிகபட்சமாக 2,691 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
சிலாங்கூரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டுச் சேவைகளின் அதிகப்படியான தேவையை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.
இந்த BRAIS திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு 8 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு மற்றும் கல்விக்கு ஆதரவளிப்பதற்காக உருவாக்கப்பட்ட இத்திட்டம், சிலாங்கூர் முழுவதும் 1,800 பயனாளிகளுக்குச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.







