தங்கா, ஜூலை 24 — ஜாலான் பயாமாஸில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில் (Petrol station) கட்டுப்பாடின்றி ஆக்ரோஷமாக நடந்து கொண்ட நபர், மனநலச் சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி (OKU) என்பது தெரியவந்துள்ளது.
30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனக்குத்தானே காயப்படுத்த முயன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, மக்களிடையே பல்வேறு ஊகங்கள் எழுந்தன.
இச்சம்பவம் ஜாலான் பயாமாஸில் உள்ள ஓர் பெட்ரோல் நிலையத்தில் நடந்துள்ளது. சில தரப்பினர் கூறுவது போல இதில் எவ்வித குற்றவியல் பின்னணியும் இல்லை என்றும் தங்கா மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்பிரிண்டன் ரோஸ்லான் முகமது தாலிப் தெரிவித்தார்.
காவல்துறையின் சோதனையில், சம்பந்தப்பட்ட நபரிடம் மாற்றுத்திறனாளி அட்டை இருப்பதும், அவர் மூவார் சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையில் (HPSF) தொடர் மனநலச் சிகிச்சை பெற்று வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் உண்மையற்ற தகவல்களைப் பரப்பவோ அல்லது தேவையற்ற ஊகங்களை வெளியிடவோ வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.







