உலு சிலாங்கூர், ஆகஸ்ட் 19 — இன்று காலை புக்கிட் பெருந்தோங், ஜாலான் புக்கிட் மஞ்சுங்கில் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 54 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் எம். மணிமாறன் இதனை உறுதிப்படுத்தினார். இச்சம்பவம் காலை 8 மணியளவில் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
விசாரணையில், பிரிமா புக்கிட் பெருந்தோங்கில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் அப்பெண் மீது மோதியதாகத் தெரிய வந்துள்ளது. அக்காரை 33 வயதான பெண் ஒருவர் ஓட்டி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோலா குபு பாரு மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என எம். மணிமாறன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






