ஷா ஆலாம், ஆகஸ்ட் 19 — அதிகமனோர் MamaKerja 2.0 திட்டத்திற்கு விண்ணப்பிக்க முயன்றதால் NINE செயலியில் தற்காலிக தொழில்நுட்பத் தடங்கல் ஏற்பட்டது.
தற்போது அப்பிரச்சனை சரிசெய்யப்பட்டு சிலாங்கூரில் பணிபுரியும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் MamaKerja 2.0 உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே NINE செயலியை அணுகியவர்களின் எண்ணிக்கை எதிர்பாராத வகையில் அதிகரித்ததால், செயலியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டதாக சிலாங்கூர் MBI அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தற்போது NINE செயலி வழக்கமான முறையில் செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் MamaKerja 2.0 திட்டத்திற்கான விண்ணப்பங்களைத் தொடர்ந்து சமர்ப்பிக்கலாம்.
இதனிடையே, MamaKerja 2.0 திட்டத்திற்கு NINE செயலி வழியாக 16.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக MBI முன்னதாக தெரிவித்திருந்தது.
பொதுமக்கள் விண்ணப்பங்களை சிரமமின்றி மேற்கொள்ளும் வகையில் NINE செயலியின் திறன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவையான மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும் என MBI உறுதியளித்துள்ளது.
MamaKerja 2.0 திட்டத்தின் கீழ் சிலாங்கூரில் உள்ள 10,000 பணிபுரியும் தாய்மார்களுக்கு தலா 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
பணிபுரியும் தாய்மார்கள் எதிர்கொள்ளும் குழந்தைப் பராமரிப்புச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.







