உலு லங்காட், ஜூலை 4: ஆறு வயது மற்றும் அதற்கு உட்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதற்கான செலவினச் சுமையைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'மாமாகர்ஜா' (MamaKerja) திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் திறக்கப்படவுள்ளன.
சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த RM1,000 நிதியுதவிக்கு, 'நைன்' (Nine) செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம் என மகளிர் மேம்பாட்டுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களின் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பதிவுசெய்யப்பட்ட குழந்தைப் பராமரிப்பு மையங்கள் (Taska), மழலையர் பள்ளிகள் (Tadika) அல்லது குழந்தைப் பராமரிப்பாளர்களிடம் (Pengasuh) அனுப்பியிருந்தால், இந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படவுள்ள இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
இந்த உதவித்தொகை வேலைக்குச் செல்லும் 10,000 தாய்மார்களுக்குப் பயனளிக்கும். இம்முறை விண்ணப்பங்கள் இணையம் வாயிலாகச் சற்று மாறுபட்ட வடிவத்தில் பெறப்பட்டாலும், தகுதியுடைய 10,000 தாய்மார்களும் தலா RM1,000 நிதியுதவியைப் பெறுவது உறுதி செய்யப்படும்.







