ஷா ஆலம், ஆகஸ்ட் 18: ராக்கி வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர் மீது எதிர்வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20), கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.
24 வயதான முகமட் ஷா ஹிசாம் காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் மீது எந்தச் சட்டத்தின் கீழ், எந்தப் பிரிவின் அடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது என்பது குறித்து இதுவரை தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என வழக்கறிஞர் ரஃபிக் தெரிவித்தார்.
இதனிடையே, சம்பவத்தன்று ஷா ஹிசாம் சமூகப் பிரதிநிதியாகச் செயல்பட்டுள்ளார். தாமான் தெலுக் கெடோங் இண்டாவில் MBDK மேற்கொண்ட அதிகாரப்பூர்வ நடவடிக்கைக்கு உதவுமாறு எழுத்துப்பூர்வமாக அவர் அழைக்கப்பட்டிருந்ததாகவும் ரஃபிக் தெரிவித்தார்.
ராக்கியின் உரிமையாளர் மற்றும் விலங்குகள் நல அமைப்புகள், நாயைப் பிடிக்கும் நடவடிக்கையின்போது கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும், MBDK மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட பணியாளர்கள், பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்களின் அடிப்படையில்தான் அந்த நடவடிக்கை மேற்கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நீதிமன்ற நடவடிக்கையில் ஷா ஹிசாம் மீது சுமத்தப்படவுள்ள குற்றச்சாட்டின் முழு விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.







